Thursday, October 15, 2009

கண்டதும் காதல்

கண்டதும் காதலில் நம்பிக்கை
கொண்டவன் நான்

காதலுக்கான அறிகுறி ஏதுமில்லை
உன்னை மணவறையில் பார்த்தபோது
எதிர்காலம் இருட்டாய் மனதில் எங்கோ
ஒளிந்து கொண்டது

பட்டாடை சரசரக்க, சிரிப்பொலி கலகலக்க
மென்உரசல்களுடன் மனதில் பதிய வேண்டிய
சடங்குகள் என் உதறல்களில்
கடந்து போயின.

என் முகம் பார்த்து மனமறிந்த தாய்
”காலம் பதில் சொல்லும்” என்றாள்.
ஆம், பதில் சொல்லியது

முதலில் ஈர்த்தது உன் கொலுசொலி
மூன்று முத்துகளை வைத்துக் கொண்டு
சீரான நடையில் தாளங்கள் இசைத்து
மனதை வருடினாய்.

மனதின் குறிப்பறிந்து செய்யும் செயலால்
கொஞ்சம் கொஞ்சமாய் மனதை கொள்ளை
கொண்டாய் பெண்ணே.....

உன் தலைஅசைவிற்கு காதணி
ஆடும் நடனத்தில் நீ
என்னை ஆட்டுவித்தாய்

உன் மிரண்ட விழிகளில்
உன் மலர்ந்த புன்னகையில்
நீ முணுமுணுக்கும் இசையில்
நீ செய்யும் சமையல் சாகசங்களில்
உன் வெண்டைகாய் விரலில்
உன் நெற்றி சுருள் கேசத்தில்
இப்படி சொல்லிகொண்டே போகலாம்
இந்த நீண்ட வரிசையில்
தொலைந்து போனேன் நான்

கால்களால் மார்பு மிதித்து
என்னை மிரட்டிய நம் குழந்தையை
பரிசாய் கோடுத்த போது உன்னில்
சரணடைந்தேன் நான்

என்னை வாழ்வில் வெற்றி கொண்டவனாய்
பார்கிறது உலகம் எனக்கு தெரியும்
அன்பே ,
என் ஒவ்வொரு வெற்றியிலும் நீ
ஒழிந்து கொண்டிருக்கிறாய்

உன்னை மிரட்சியுடன் பார்த்து
மணநாண் பூட்டிய மணநாளை
நினைக்கும் போது
“வெட்கமாய் இருக்கிறது” பெண்ணே!

சகியே,
கொண்டாடபோகும் சதாபிஷேகத்தின்
பரிசாய் எனக்கு ஒரு வரம் கொடு
அடுத்த ஜென்மத்தில் நான் நீயாய்
நீ நானாய்................................