Wednesday, November 18, 2009

பயணங்கள்

பயணங்களில் எவ்வளவு சுவராசியமான அனுபவம் இருக்குமோ அவ்வளவு சிரமங்களும் இருக்கத்தான் செய்கிறது. வருடத்திற்கு முந்நூறு நாட்கள் பயணம் செய்ய சொன்னாலும் சந்தோஷமாக தலையசைபேன்,பயணத்தின் அலுப்பு சில மணி நேர தூக்கத்தில் காணாமல் போய்விடும்

பேருந்து பயணத்தில் அரசு விரைவு பேருந்துகளில் உற்சாகமாக சென்னைக்கு பயணித்திருக்கிறேன்.பேருந்தினுள் ஜன்னல் சாத்த முடியாமல் குளிரிலும்,மழையிலும் துவண்டுருக்கிறேன்.மழை சாரலாக பெய்யும் வரை தான் பயணிக்கும் போது இனிமை.

பயணங்கள் கூட வாழ்க்கையின் பல விஷயங்களை கற்றுக்கொடுக்கிறது.சக பயணிகள் ஒவ்வொருவரும் வெவ்வேறு சிந்தனையோடு பயணிப்பதை உணர முடியும்.பயணிப்பதே சிலருக்கு வாழ்க்கை ,சிலருக்கு அது பொழுதுபோக்கு.

தீபாவளி, பொங்கல் பயணங்களை தென் தமிழகத்து மக்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. மூன்று மடங்கு கட்டணம் கொடுத்தும் பொங்கல் அன்று இரவு ஊருக்கு வர நேர்ந்ததுண்டு.அதிகாலை நான்கு மணிக்கு பயணம் என்றால் குளிக்காமல் பயணம். ஏழு மணிக்கு குளித்து புத்துணர்ச்சியான பயணம்.

அப்படியொரு காலை பயணத்தில் ஆங்கில நாளிதழ் படித்துகொண்டு இருந்தேன். பக்கத்து பயணி தமிழ் தினமலர் நாளிதள் வாசித்துக்கொண்டிருந்தார். அது ஒரு ஐபில் சீஸன் என்பதால் வண்ண படங்கள் பார்க்க தமிழ் நாளிதழ் கேட்டேன்.அவர் மடக்கி வைத்து கொண்டார். கொடுக்க மனமில்லை என்று அமைதியாக இருந்தேன். அவர் தீடீரென்று 'கசங்கி விடும்' என்றார். ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்று விட்டு விட்டேன். சிறிது நேரத்தில் கண்டக்டர் அவரிடம் ஒரு பேப்பரை படித்து விட்டு கொடுத்தார்.

இந்த பேப்பர் கசங்காது என்று உங்களுக்கு தெரியும என்றேன். நீங்கள் உங்கள் hindu பேப்பரை கொடுப்பீர்களோ! என்றார். கண்டிப்பாக "படிக்கிறீர்களா?" என்றேன்.

பின்பு சிறிது நேரம் கழித்து நாளிதளை எடுத்து தந்தார், நான் வாங்கவில்லை பேப்பரை ஜன்னலுக்கு வெளியே நீட்டி நீங்கள் படிக்கவில்லை..,வெளியே எறிந்து விடுவேன் என்றார் நானும் சளைகாமல் தங்கள் பேப்பரை தாங்கள் எங்கு வேண்டுமனாலும் எறியலாம் ஆனால் நான் படிக்க மாட்டேன் என்றேன்.
அவர் பேப்பரை மடித்து வைத்து கொண்டு ஏதோ முணுமுணுத்தார் அவர் நிறுத்தம் வந்ததும் இறங்கி சென்றுவிட்டார். எத்தனையோ வித்தியசமான மனிதர்களை பார்க்கலாம் நாமும் வித்தியசமான மனிதராய் பலர் கண்ணுக்கு தெரிந்திருக்கலாம்.பயணங்கள் தொடரும்.

Thursday, October 15, 2009

கண்டதும் காதல்

கண்டதும் காதலில் நம்பிக்கை
கொண்டவன் நான்

காதலுக்கான அறிகுறி ஏதுமில்லை
உன்னை மணவறையில் பார்த்தபோது
எதிர்காலம் இருட்டாய் மனதில் எங்கோ
ஒளிந்து கொண்டது

பட்டாடை சரசரக்க, சிரிப்பொலி கலகலக்க
மென்உரசல்களுடன் மனதில் பதிய வேண்டிய
சடங்குகள் என் உதறல்களில்
கடந்து போயின.

என் முகம் பார்த்து மனமறிந்த தாய்
”காலம் பதில் சொல்லும்” என்றாள்.
ஆம், பதில் சொல்லியது

முதலில் ஈர்த்தது உன் கொலுசொலி
மூன்று முத்துகளை வைத்துக் கொண்டு
சீரான நடையில் தாளங்கள் இசைத்து
மனதை வருடினாய்.

மனதின் குறிப்பறிந்து செய்யும் செயலால்
கொஞ்சம் கொஞ்சமாய் மனதை கொள்ளை
கொண்டாய் பெண்ணே.....

உன் தலைஅசைவிற்கு காதணி
ஆடும் நடனத்தில் நீ
என்னை ஆட்டுவித்தாய்

உன் மிரண்ட விழிகளில்
உன் மலர்ந்த புன்னகையில்
நீ முணுமுணுக்கும் இசையில்
நீ செய்யும் சமையல் சாகசங்களில்
உன் வெண்டைகாய் விரலில்
உன் நெற்றி சுருள் கேசத்தில்
இப்படி சொல்லிகொண்டே போகலாம்
இந்த நீண்ட வரிசையில்
தொலைந்து போனேன் நான்

கால்களால் மார்பு மிதித்து
என்னை மிரட்டிய நம் குழந்தையை
பரிசாய் கோடுத்த போது உன்னில்
சரணடைந்தேன் நான்

என்னை வாழ்வில் வெற்றி கொண்டவனாய்
பார்கிறது உலகம் எனக்கு தெரியும்
அன்பே ,
என் ஒவ்வொரு வெற்றியிலும் நீ
ஒழிந்து கொண்டிருக்கிறாய்

உன்னை மிரட்சியுடன் பார்த்து
மணநாண் பூட்டிய மணநாளை
நினைக்கும் போது
“வெட்கமாய் இருக்கிறது” பெண்ணே!

சகியே,
கொண்டாடபோகும் சதாபிஷேகத்தின்
பரிசாய் எனக்கு ஒரு வரம் கொடு
அடுத்த ஜென்மத்தில் நான் நீயாய்
நீ நானாய்................................

Thursday, September 17, 2009

தனிமை

நினைவுகள் கூட தீர்ந்துவிட்டன
கனவுகள் கான நினைதேன்
பாலைவனங்களே வந்தன...

நனவுகள் தப்பி, கண்ணீர்
இதழ்களை எரித்த போது
சோகங்கள் பாறைகளாய்
மனதை அழுத்தியது

கால் தடுக்கிய போது
தாங்கிய சுவர்களிடம்
சொன்னேன் 'நன்றி' என்று
நான்கும் கூட்டமாய்
என்னை பார்த்து சிரித்தன

என் வீட்டு கண்ணாடிக்கு
கொஞ்சம் கோபம் தான்
என்னை மட்டுமே
பார்க்கவேண்டியுள்ளதே

T.V யும் ரேடியோவும்-என்
வீட்டு தோட்டமும்,என்
தனிமையில் பங்கு எடுக்கும்
அன்பு தோழிகள்

தோட்டத்து ரோஜாவை
அன்பளிப்பாய் கொடுக்க
முகங்களை தேடினேன்,மறைந்த
பாட்டிக்கு கொடுத்தேன்